எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

பாரதிதாசன் - தமிழ் கவிஞர் புகைப்படம்

பாரதிதாசன் (Bharathidasan) வரலாறு

பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில், வணிகராயிருந்த கனகசபை, இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கனக சுப்புரத்தினம்.

பாரதிதாசன் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியில் பயின்ற காலமே கூடுதலானது. ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் மகாவித்வான் ஆ. பெரியசாமிப் பிள்ளை அவர்களிடமும், பங்காரு பத்தர் அவர்களிடமும் தமிழ் மற்றும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். புதுவை மாநிலக் கல்வே கல்லூரியில் உயர்நிலைக் கல்வி பயின்று பின்னர்த் தமிழ்ப் புலவர் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்றுப் புலவராகத் தேர்ச்சி பெற்றார். 

பாவேந்தர் ஒரு விழாவில் சுப்பிரமணிய பாரதியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார்.  பாரதியரால் கவரப்பட்டு அவர் மீது பற்று மிகக் கொண்டு தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

இவர் தன் பதினெட்டாம் வயதில் காரைக்காலைச் சேர்ந்த நிரவி எனும் ஊரில் உள்ள பள்ளியில் அரசு ஆசிரியராகப் பணி ஏற்றார்.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "கே.எஸ். பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

பழனி அம்மாளை இல்லறத் துணைவியாக ஏற்றார்.  இவர்கள் சரசுவதி, கோபதி, வசந்தா, ரமணி எனும் மக்களைப் பெற்றெடுத்தார்கள்.

தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார் மேலும் அவர் அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். 

செட்டிநாட்டுத் தமிழறிஞர்களிடம் கவிஞர் தொடர்பு கொண்டிருந்தார்.  அவர்களின் நிதி உதவியுடன் சென்னை சாந்தோம் சாலையில் 'முத்தமிழ் மன்றம்' நிறுவினார்.

1946, சூலை 29-இல் அறிஞர் அண்ணாவால், கவிஞருக்கு ரூ.25,000 வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். 

பாரதிதாசன் இயற்கை, தமிழ், திராவிட இயக்கம், பெண் விடுதலை, பகுத்தறிவு, சமூக சீர்திருத்தம் ஆகிய பல தலைப்புகளில் கவிதை மற்றும் இலக்கியம் படைத்துள்ளார்.

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு, 1969-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.

தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்திக் கேடயம் வழங்கி பாரதிதாசனின் இலக்கியப் படைப்புக்களைப்  பாராட்டினார்.  

1964  ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் நலிவுற்றார் பாவேந்தர்.  அதன் பின்னர் சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னையில் இயற்கை எய்தினார்.  ஏப்ரல் 22 ஆம் நாள் அவரது உடல் புதுவை மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாரதிதாசனின் புகழ்பெற்ற பாடல்கள் சில 

பாவேந்தர் பாரதிதாசனின் முதல் பாட்டு சக்தி பாட்டு என்று அழைக்கப்படுகிறது. மகாகவி பாரதியாரின் முன் அவர் பாடிய பாடல்:

எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி

ஏழு கடல் அவள் வண்ணமடா! – அங்குத்

தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்த

தாயின் கைப்பந்தென ஓடுமடா – ஒரு

கங்குலில் ஏழு முகிலினமும் – வந்து

கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? – எனில்

மங்கை நகைத்த ஒலியெனலாம் – அவள்

மந்த நகையங்கு மின்னுதடா!


இயற்கை 

பாரதிதாசனின் அழகு கவிதை:

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! 

கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், 

தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற 

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் 

தனில் அந்த 'அழகெ'ன்பாள் கவிதை தந்தாள்.

சிறு குழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; 

திருவிளக்கில் சிரிக்கின்றாள், நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் 

நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் 

புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என் 

நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.

திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச் 

செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன்  யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும் 

அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன்.
பசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண்! 

பழமையினால் சாகாத இளையவள் காண்!
நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! 

நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை. 

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ போல் எங்கெங்கு நோக்கினும் அழகு என்று அறிவித்தவர் பாரதிதாசன். முத்தாய்ப்பான வரி ‘பழமையினால் சாகாத இளையவள் காண்!’.


உறங்கும் உலகை உசுப்பி எழுப்பும் உதயசூரியனை இவ்வாறு வர்ணிக்கிறார்:

ஒளிசெய்தான் கதிர்க்கோமான் வானகத்தில் மண்ணில்!
உயர்மலைகள், சோலை, நதி இயற்கை எழில்கள் பார்
களிசெய்தான் பெருமக்கள் உள்ளத்தில்! அதனால்
கவிதைகள், கைத்தொழில்கள் என்னென்ன ஆக்கம்!

தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி!
திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்;
ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில்
உயர்கின்றான்; உதயசூரி யன்வாழ்க நன்றே!

ஆக்கத்திற்குக் களி செய்தான்; அறிவுலகம் தழுவ இருட்கதவை உடைத்தெறிந்தான்; ஒளி உலகின் அதிபதி சூரியன்.


தென்றலின் இன்பம் மற்றும் விளையாட்டு பற்றிப் பாவேந்தரின் கவி நயம்:

ருந்தஓர் மணமும், மிக்க இனியதோர் குளிரும், கொண்டு

விருந்தாய்நீ அடையுந் தோறும் கோடையின் வெப்பத் திற்கு

ருந்தாகி அயர்வி னுக்கு மாற்றாகிப், பின்னர், வானிற்

ருந்தாகி, இளங்கி ளைமேற் பறந்தோடிப் பாடு கின்றாய்!

ளிச்சிறு தும்பி பெற்ற கண்ணாடிச் சிறகில் மின்னித்

துளிச்சிறு மலர்இ தழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி,

வெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையாடிப், போய்க்,

கிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்றாய் தென்ற லேநீ!


நிலவின் அழகை வர்ணிக்கும் பாவேந்தர்: 

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து 

நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை! 

கோல முழுதும் காட்டிவிட்டால் காதல் 

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் 

சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான் 

சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ 

காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் 

கனல் மாறிக் குளிர் அடைந்த ஒளிப்பிழம்போ!


நிலாக் குளிரும் சூழலை அக்கால வறுமையோடு ஒப்பிடும் அழகு:

உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில் 

    ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு 

நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவதில்லை, 

    நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத் 

தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் 

    சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்

கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

    கவின் நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!


இளங்காலை வான் அழகு:

கோழிகூ விற்று! வையம், கொண்டதோர் இருளைத் தங்க

மேழியால் உழுதான் அந்த விரிகதிர்ச் செல்வன்; பின்னர்

ஆழிசூழ் உலகின் காட்சி அரும்பிற்று! முனைய விழ்ந்து

வாழிய வைய மென்று மலர்ந்தது காலை வானம்!

மேழி- கலப்பை

முகிற் சேற்றுக்குள் மலர்ந்த செந்தாமரையாய் வானவில்:

அதிர்ந்தது காற்று! நீளப் பூங்கிளை அசைந்தா டிற்று!

முதிர்ந்திட்ட முகிலின் சேறு மூடிற்றுச் சேற்றுக் குள்ளே

புதைந்திட்ட கதிரிற் பூத்த புதுப்புது வண்ண மெல்லாம்

ததும்பிற்றே வான வில்லாய்! பாரடி அழகின் தன்மை!

காதல் 

வாய்விட்டுச் சிரித்துப் பின் போய்விட்ட காதலன்:

சோலையிலோர் நாள் எனையே

தொட்டிழுத்து முத்தமிட்டான்

துடுக்குத் தனத்தை என்சொல்வேன்

மாலைப் பொழுதில்இந்த மாயம்புரிந்த செம்மல்

வாய்விட்டுச் சிரித்துப் பின்

போய்விட்டானேடி தோழி! (சோ)

அகம் புகுந்தான் சேயோ - அவனை எட்டி

அணக்க வழிசொல் வாயோ!

சகம் பெறும் அவன்அன்று

தந்த துடுக்கு முத்தம்!

சக்ரவாகம் போல்வந்தான்;

கொத்திப்போக மறந்தான்!

(சோ)

அந்த மானாய் நானில்லை:

தோகையவள் போகையிலே துள்ளும் வளர்ப்புமான் 

பாகல் கடித்த படுகசப்பால் ஓடிவந்தே 

அன்னாளை அண்டி அழகுமுகம் எடுக்கப் 

பொன்னான முத்தமொன்று பூவை கொடுத்தாளே 

அத்தமான் நானாய் அமைந்தேனோ? இல்லையே! 

எந்த வகையிலே ஏந்திழையை நான்பிரிவேன்?


முதியோரிடம் உண்டாகும் காதல் வாழ்க்கையைப் பாரதிதாசன் அழகாகக் காட்டியுள்ள பாங்கு:

முதியவர்:

புதுமலர் அல்ல; காய்ந்த 

  புற்கட்டே அவள் உடம்பு! 

சதிராடும் நடையாள் அல்லள் 

  தள்ளாடி விழும் மூதாட்டி 

மதியல்ல முகம் அவட்கு 

  வறள்நிலம்! குழிகள் கண்கள்! 

எது எனக்கின்பம் நல்கும்? 

  ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!

முதியவள்:

அறம் செய்த கையும் ஓயும்! 

  மக்களை அன்பால் தூக்கிப் 

புறம்போன காலும் ஓயும்! 

  செந்தமிழ்ப் புலவர் சொல்லின் 

திறம் கேட்ட காதும் ஓயும்! 

  செயல்கண்ட கண்ணும் ஓயும்! 

மறவரைச் சுமக்கும் என்றன் 

  மன மட்டும் ஓய்தலில்லை!

முதியவள் நன்றாய் தூங்கினாளா:

குடித்தோமே பாலின் கஞ்சி;

குறட்பாவின் இரண்டு செய்யுள்

படித்தோமே, அவற்றி னுக்கு

விரிவுரை பலவும் ஆய்ந்து

முடித்தோமே! மொணமொ ணென்று

மணிப்போறி சரியாய்ப் பத்தும்

குறித்தது துயின்றேன்;இப்போ(து)

அழைத்தீர்கள் விழித்தேன் என்றாள்.


தாரும் மின்னும் மீனும் வருந்தும்:

கொம்பென்றால் அவள்மெய்யைத் தார்வ ருந்தும்!

கொடிஎன்றால் அவளிடையை மின்வ ருந்தும்! 

அம்பென்றால் அவள்விழியை மீன்வ ருந்தும்!

அலைஎன்றால் அவள்குழலை முகில்வ ருந்தும்!

செம்பென்றால் பொன்ஈயும் வாழ்வு வாய்ந்தாள்

செயல்என்றால் "உளம்வாய்மெய் உனக்கே ஆகும்

நம்பென்பாள்!" எனக்குத்தா னோஅல் லாது

நலிவுற்றுச் சாகத்தான் பிறந்திட் டேனோ!

தமிழ் 

தமிழின் இனிமை:

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் 

கழையிடை ஏறிய சாறும், 

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் 

பாகிடை ஏறிய சுவையும், 

நனிபசு பொழியும் பாலும் - தென்னை 

நல்கிய குளிரிள நீரும், 

இனியன என்பேன் எனினும் - தமிழை 

என்னுயிர் என்பேன் கண்டீர் ! 


தமிழின்பம்:

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!


தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!


சங்கநாதம்:

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!


தமிழ் வளர்ச்சி:

எளியநடை யில்தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்;

இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.

வௌியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக

விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு

தௌிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.

எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்

இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.


தமிழ்தாய்:

செந்தமிழே உயிரே நறுந் தேனே

செயலினை மூச்சினை உனக்களித் தேனே

நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு

நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

பகுத்தறிவு 

புதியதோர் உலகம் செய்வோம்:

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட 

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் 

பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் 

புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் 

இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம் 

இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்


சாதிகள் இல்லையடி பாப்பா:

உலகினில் சாதிகள் இல்லை-என்

உள்ளத்தில் வேற்றுமை இல்லை

கலகத்தைச் செய்கின்ற சாதி-என்

கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ?


சாதிப்பிரிவு செய்தார்

  தம்மை உயர்த்துதற்கே

நீதிகள் சொன்னாரடி-சகியே

  நீதிகள் சொன்னாரடி


தீண்டாமை என்னும் பேய்:

தீண்டாமை என்னும் ஒருபேய் - இந்தத் 

தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம் - எனில் 

ஈண்டு பிறநாட்டில் இருப்போர் - செவிக்கு 

ஏறியதும் இச்செயலைக் காறி உமிழ்வார்


பெண்விடுதலை 

கல்வியில் லாத பெண்கள் 

  களர் நிலம்: அந்நிலத்தில் 

புல் விளைந்திடலாம்; நல்ல 

  புதல்வர்கள் விளைதல் இல்லை! 

கல்வியை உடைய பெண்கள் 

  திருந்திய கழனி; அங்கே 

நல்லறிவுடைய மக்கள் 

  விளைவது நவிலவோ நான்?

பொதுவுடைமை 

உழைக்கும் தோழர்கள்:

சித்திரச் சோலைகளே! உமை நன்கு 

திருத்த இப்பாரினிலே - முன்னர் 

எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ 

உங்கள் வேரினிலே!


நித்தம் திருத்திய நேர்மையினால் மிகு 

நெல்விளை நன்னிலம் - உனக் 

கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை 

இறைத்தனர் காண்கிலமே. 


தாமரை பூத்த தடாகங்களே, உமைத் 

தந்த அக் காலத்திலே - எங்கள் 

தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் 

சொல்லவோ ஞாலத்திலே.


யாரப்பா அங்கே:

ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்

உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!

பாரதிதாசனின் கவிதைகள் (Bharathidasan poems)

  • மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு 

  • மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்னம் 

  • மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 

  • கதர் இராட்டினப் பாட்டு 

  • சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 

  • தொண்டர் படைப் பாட்டு 

  • தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு 

  • சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 

  • சுயமரியாதைச் சுடர் 

  • புரட்சிக்கவி 

  • பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) 

  • பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) 

  • பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) 

  • பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) 

  • இசையமுது (முதல் தொகுதி) 

  • இசையமுது (இரண்டாம் தொகுதி) 

  • எதிர்பாராத முத்தம் 

  • குடும்பவிளக்கு (முதல் தொகுதி) 

  • குடும்பவிளக்கு (இரண்டாம் தொகுதி) 

  • குடும்பவிளக்கு (மூன்றாம் தொகுதி) 

  • குடும்பவிளக்கு (நான்காம் தொகுதி) 

  • குடும்பவிளக்கு (ஐந்தாம் தொகுதி) 

  • பாண்டியன் பரிசு 

  • இருண்ட வீடு 

  • அழகின் சிரிப்பு 

  • காதல் நினைவுகள் 

  • தமிழியக்கம் 

  • எது இசை? 

  • முல்லைக்காடு 

  • மகாகவி பாரதியார் 

  • காதலா? கடமையா? 

  • கடல்மேற்குமிழிகள் 

  • அகத்தியன் விட்ட புதுக்கரடி 

  • நல்ல முத்துக் கதை 

  • இந்தி எதிர்ப்புப் பாட்டு 

  • திராவிட திருப்பாடல் 

  • பராதிதாசன் ஆத்திச்சூடி 

  • தமிழச்சியின் கத்தி 

  • ஏற்றப்பாட்டு 

  • திரவிடப் புரட்சி திருமணத் திட்டம் 

  • சத்தி முத்தப் புலவர் 

  • அமிழ்து எது? 

  • பொங்கல் வாழ்த்துக்குவியல் 

  • தேனருவி (முதல் தொகுதி) 

  • தேனருவி (இரண்டாம் தொகுதி) 

  • தாயின் மேல் ஆணை 

  • இளைஞர் இலக்கியம் 

  • குறிஞ்சித் திட்டு (பிரிவு 1) 

  • குறிஞ்சித் திட்டு (பிரிவு 2) 

  • கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 

  • மணிமேகலை வெண்பா 

  • பாரதிதாசன் பன்மணித்திரள் 

  • காதல் பாடல்கள் 

  • குயில் பாடல்கள் 

  • ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது 

  • தமிழுக்கு அமுதென்று பேர் 

  • புகழ் மலர்கள் 

  • நாள் மலர்கள் 

  • வேங்கை எழுக 

  • இளையார் ஆத்திச்சூடி

பாரதிதாசனின் நாடகங்கள் வரிசை 

  • ஐயர் வாக்குப் பலித்தது 

  • விகடக் கோர்ட் 

  • மூளை வைத்தியம் 

  • சிந்தாமணி 

  • லதாக்ருகம் 

  • தமிழச்சியின் கத்தி 

  • வீரத்தாய் 

  • இரணியன் அல்லது இணையற்ற வீரன் 

  • கற்கண்டு 

  • நல்ல தீர்ப்பு 

  • புரட்சிக் கவி 

  • பொறுமை கடலினும் பெரிது 

  • ஒன்பது சுவை 

  • போர் மறவன் 

  • அமைதி 

  • ஏழை உழவன் 

  • காதல் வாழ்வு 

  • மருத்துவர் வீட்டில் அமைச்சர் 

  • சத்திமுத்தப் புலவர் 

  • இன்பக்கடல் 

  • குளத்தில் குரங்கு 

  • கழைக்கூத்தியின் காதல் 

  • ஆரிய பத்தினி மாரிஷை 

  • குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 

  • படித்த பெண்கள் (1948) 

  • படித்த பெண்கள் (1949) 

  • கருஞ்சிறுத்தை 

  • சேரதாண்டவம் 

  • ஆக்கம் தீவினை (திருக்குறள் சினிமா) 

  • சௌமியன் 

  • அமிழ்து எது? 

  • ரஸ்புடின் 

  • கோயில் இரு கோணங்கள் 

  • சமணமும் சைவமும் 

  • அம்மைச்சி 

  • தலைமலை கண்ட தேவர் 

  • மேனி கொப்பளித்ததோ? 

  • பிசிராந்தையார் 1,2 

  • பாரதப் பாசறை 

  • குடும்ப விளக்கும் குண்டுக் கல்லும் 

  • இசைக் கலை 

  • பறவைக் கூடு 

  • மக்கள் சொத்து 

  • குழந்தை நாடகம் 

  • நிமிஷ நாடகம் 

  • கொய்யாக் கனிகள் 

  • போர்க்காதல் 

  • ஆனந்த சாகரம் 

  • வஞ்ச விழா

    Read More: திருவள்ளுவர் வரலாறு