்ணுதல் இறந்தாரை எண்ணுதல் போன்றது. அளவிட முடியாதது.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
இம்மை மறுமை என்னும் இரண்டினது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து, துறவறத்தைப் பூண்டாரது பெருமையே உலகின் கண் உயர்ந்தது.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
உயிரின் அறிவால் மனக்கருவி கொண்டு ஐம்பொறிகளை ஒழுக்கமுற காத்தல், சிறந்த கதிக்கு ஒரு வித்தாம்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
ஐம்பொறி புலன்களை, பற்றும் மனதின் வண்ணம் செல்லாமல் அடக்கித் தவம் மேற்கொள்வோர் வலிமைக்கு மேலுலகத் தலைவன் இந்திரனே சான்று. தெய்வ மகளிரை அனுப்பித் தவமழியச் செய்தான் இந்திரன் என்று புராணங்கள் சான்று காட்டுகின்றன.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
துறவறத்து அரியன செய்பவரே பெரியர் ஆவார். அவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். துறவு ஒன்றால் மட்டும் பெரியர் என்று கொள்ளப்படாது.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
ஐந்து புலன்களையும் அதனோடு ஒன்றியிருக்கும் தத்துவங்களையும் பகுத்து அறிவானே இவ்உலகின் உண்மை அறிவான்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை, அவர் உதிர்க்கும் தவறாது பலிக்கும் சொல் கண்கூடாகக் காட்டும் .
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
எல்லா நற்குணங்களையும் உடைய நீத்தார் கோபம் கணப்பொழுது ஆனாலும் அதை வெளிக்கொணராமல் காத்தலே அவருக்குப் பெருமை.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
அந்தணர் என்போர் எல்லா உயிர்க்கும் அருளும் கருணையும் செய்வோர்.
ஒழுக்கத்தின் கண்ணே நின்று, யான் எனது என்கிற இருவகைப் பற்றினையும் நீக்கி, இம்மை மறுமை என்னும் இரண்டினது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து துறத்தல் மிகவும் பெருமையுடையது. ஐம்பொறி புலன்களைக் காத்து, அவை சார்ந்த தத்துவங்களை அறிந்து, செய்யும் தவத்தால் அடையும் வலிமைகொண்டு, சொல் பலிக்கும் திறம்பெற்று, செயற்கரிய செய்வோரே நீத்தார். சினம் காப்பதும், கருணையுடன் அருள் பாலிப்பதும் துறந்தாருக்கு இன்றியமையாதது என்றும் இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
« Previous Page 4 of 6 Next »
Copyright © 2026 R and R Consultant
Total Hits:362392