தேன்; இயைந்த செய்க என்றான் - இவர்களைக் கொண்டு இயைந்தபடி காரியங்களைச் செய்வீராக
என்றான்.
தாழும் மா மழை தழுவும் நெற்றியால்
சூழி யானை போல் தோன்றும் மால் வரைப்
பாழி மா முகட்டு உச்சிப் பச்சை மா
ஏழும் ஏறப் போய் ஆறும் ஏறினார்.
தாழும் மா மழை - படிந்திருக்கின்ற பெரு மேகங்களை; தழுவும் நெற்றியால் - தழுவியிருக்கும் தாழ்வரைகளால்; சூழி யானை போல் - முகபடாம் அணிந்துள்ள யானையைப் போல; தோன்றும் மால்வரை - காணப்படும் பெரிய மலையினது; பாழிமா முகட்டு உச்சி - பெருமை பொருந்திய உயர்ந்த சிகரத்தின் உச்சியில்; பச்சைமா ஏழும்
ஏற - சூரியனது தேரில்பூட்டப்பட்ட பச்சைநிறக் குதிரைகள் ஏழும் ஏறும்படியான உச்சிக் காலத்தில்; ஆறும் ஏறினார் - அந்தச் சரயு நதியைக் கடந்து சென்றனர்.
பற்று அவா வேர் ஒடு உம் பகை அறப் பிறவி போய்
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனில்
சொற்ற ஆம் அளவது ஓ மற்று இதன் தூய்மையே.
பற்று அவா வேரொடும் பசை அற- உலகப் பொருள்களில் பற்றியுள்ள ஆசை வேரொடு பற்றற்றுப் போகவும்; பிறவி போய் முற்ற - அவ்வாசையின் பயனாய் வரும் பிறவி நோய் சென்று முடியவும்; வால் உணர்வு மேல் - மெய்யுணர்வு பெற்ற; முடுகினார் அறிவு - விரைந்து சென்று அடைகின்ற ஞானிகளின் ஆன்மஞானம்; சென்று உற்றவானவன் - சென்று அடைகின்ற இறைவனாகிய சிவபெருமானே; இருந்து யோகு செய்தனன் எனில் - இங்கிருந்து யோகத்தைச் செய்தான் என்றால்; இதன் தூய்மை சொற்றலாம் அளவதோ- இதன் தூய்மை சொல்லத் தக்க அளவுடையதாகுமோ? ஆகாது.
இச்சோலை யாதெனக் கேட்ட ராமனுக்கு. சிவபிரான் யோகுசெய்த இடமென முனிவன் கூறி. அதன் தூய்மையைச் சிறப்பித்துக் கூற. பின் மூவரும் தொடர்ந்து சென்று ஒரு பாலையை எய்தினர்
பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே
சூரும் ஓடாது கூடாது அரோ சூரியன்
தேரும் ஓடாது மா மாகம் மீது ஏறி நேர்
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது அரோ.
பாரும் ஓடாது - நிலமகளும் (வெப்பம் பொறுக்காது) அந்த நிலத்தை விட்டு ஓடிப் போகநினைத்தாலும் இயலாது; நீடாது எனும்பாலதே - ஏனெனில் இடத்தை விட்டுப் பெயராத தன்மை உடையவளாதலாலே; சூரும் ஓடாது - பாலை நிலத்துகுரிய காளியும் நீங்காள்; கூடாது அரோ - நிலத்தெய்வம் நிலத்தை விட்டு நீங்கமுடியாது; மா மாகம் மீ - அந்நிலத்துக்கு மேலே பெரிய வானத்திலே; சூரியன் தேரும் ஓடாது - பாலையின் வெப்பம் தாங்காது குதிரைகள் சோர்ந்து போவதால் பரிதியின் தேரும் ஓடாது; தேரின் நேர்காரும் ஓடாது- ஆராயின். அந்நிலத்துக்கு நேராக மேகமும் ஓடாது; நீள் காலும் ஓடாது - வீசுகின்ற காற்றும் அங்குச் செல்லாது.
தா வரும் இரு வினை செற்றுத் தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து முத்தியில்
போவது புரிபவர் மனமும் பொன் விலைப்
பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே.
தா வரும் இருவினை செற்று - தாவி வருகின்ற நல்வினை. தீவினையாகிய இரு வினைகளையும் அழித்து; தள்ள அரும் மூவகைப் பகை அரண்கடந்து - தள்ளுதற்கு அரிய மூன்று வகைப்பட்ட உயிர்ப் பகை ஆகிய காவலையும் கடந்து; முத்தியில் போவது புரிபவர்மனமும் - வீடு பேறடைவதற்குரிய காரியங்களையே செய்யும் ஞானிகள் மனமும்; பொன் விலைப் பாவையர் மனமும் - பொன்னுக்குத் தமது மேனியை விலைகூறும் விலை மாதர்களின் மனமும்; போல் பசையும் அற்றதே - (எவ்வாறு பசையற்றிருக்குமோ அதுபோல்) இப்பாலை வனமும் பசையற்றுக் கிடந்தது.
மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும்
விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்.
உருத்து மண் எடுப்பினும் - கோபித்து. இந்தப் பூமியை எடுப்பதாயினும்; கடலை வாரினும் - கடல்நீரையெல்லாம் அள்ளுவதானாலும்; உருத்து விண் இடிப்பினும் - கோபம்கொண்டு மேகத்தை இடிப்பதானாலும்; வேண்டின் செய்கிற்பாள் - அவள் விரும்பினால் செய்ய வல்லவளாவாள்; எண் உரு தெரி வரும் -எண்ணத்தினால் செய்யப்படும் நுண்மையான பாவமும் (உடலால்) செய்யப்படும் பருமையான பாவமும் உருவம் கொண்டு; பாவம் ஈண்டி - ஒரு சேரச் சேர்ந்து; ஓர்பெண் உருக்கொண்டு என - ஒரு பெண்வடிவைக் கொண்டது என்னும்படி; திரியும் பெற்றியார்-இங்குத் திரிகின்ற தன்மை உடையவள்.
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று அன்றே.
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம்- நிறைமொழி மாந்தரின் சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு சுடுசரத்தை; கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும்- கரிய நிறமும். அழகும் உடைய இராமபிரான் இருள் போன்ற நிறத்தை உடைய தாடகையின் மீது செலுத்தி விடவே; வயிரக் குன்றக்கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது - (அந்த அம்பு) வைரம் பாய்ந்த கல்போன்ற அத்தாடகையின் நெஞ்சில் தங்கியிராமல்; அப்புறம் கழன்று - (நெஞ்சில் பாய்ந்து) பின் முதுகின் புறமாகக் கழன்று; கல்லாப்புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என - கல்வி அறிவில்லாத புன்மையாளருக்கு நல்லவர்கள் சொன்ன நல்ல பொருளைப் போல; போயிற்று - ஓடிப்போய்விட்டது.
சடையப்ப வள்ளல்
தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை முடிந்தபோதெல்லாம் தன் கவிதையில் வாழ வைத்தார் கம்பர். ராமர் பட்டாபிஷேகத்தைக் கூறும் பாடலில்
அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி பற்ற,
விரைசெறி குழலி ஓங்க,
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி,
வசிட்டனே புனைந்தான் மௌலி.
என்பார்.
அரியணை – சிங்காதனம்; இருவரும் கவரி பற்ற - இலக்குவ சத்துருக்கர் இருவரும் சாமரை வீச; விரைசெறி குழலி - மணக்கும் கூந்தலை உடைய; மரபுளோர் – முன்னோர்; வசிட்டனே புனைந்தான் மௌலி - வசிட்ட முனிவர் மகுடம் சூடினார்.
https://archive.org/details/acc.-no.-7203-kambaramayanam-1984
Copyright © 2026 R and R Consultant
Total Hits:358479